Sunday, May 10, 2009

என்ன செய்வது

உனது
நினைவுகளில்

அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அரைகுறையாய் உளறிவைத்தேன்.

கவிதை என்றார்கள்
புரியவில்லை என்றார்கள்.

என்ன செய்வது
அவளுக்கும்தான்
புரியவில்லை
என் காதலை!

Thursday, May 7, 2009

வேறென்ன செய்ய?

எத்தனிக்கும் வார்த்தைகளை
எச்சி விழுங்கி முடித்த
இரக்கமில்லாத மாலை அது.

கடைசியாய் உன்னை கண்ட கணங்கள்
கண்களில் புரையோடிவிட்ட ரணங்கள்.

எனக்கோ உனக்கோ யார் முகமும் பார்க்க
இயலாத சந்திப்புஇறுதிச் சந்திப்பு!

வார்த்தை ரவைகளை இழுத்துப் பிடித்த
வாய்த் துப்பாக்கி விரைத்து விட்டது.
தோரணத் துப்பட்டா துவண்டு போய் கிடந்தது.

காற்றில் அலைந்த கற்றை குழலொன்று  
கண்ணீர்ப்பசை உபயத்தில் உன்
கன்னத்திலேயே ஒட்டிக் கொண்டது.

நம்மவர்களுக்காகவே விட்டுக் கொடுத்திருந்தோம்
நம்மை நாமே.

என்னை உடைத்து உன்னை உடைக்க
விரும்பாமல் இறுகப் பிடித்திருந்தேன் என்னை.
உன் கண்ணீரில் தான் கரைந்து விட்டேன் .

எதுவுமே பேசாமல் எழுந்து நின்றோம்
பிரிந்து செல்ல.

விக்கித்த வார்த்தை சேர்த்து
வெறுமையாய் வாழ்த்தினாய்
"என்னை விட சிறந்தவளாய்
உன்னைத் தேடி வருவாள்என.

விரக்தியாய் சிரிக்காமல்
வேறென்ன செய்ய?